பாராலிம்பிக்ஸ் படகுபோட்டி – முதல் இந்திய வீராங்கனை பிராச்சி அரையிறுதிக்கு முன்னேற்றம்…!

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் துடுப்பு படகுபோட்டியில் இந்திய வீராங்கனை பிராச்சி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.இதுவரை பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் 10 பதக்கங்களை வென்றுள்ளனர். அதில், 2 தங்கம் , 5 வெள்ளி , 3 வெண்கலம் வென்றுள்ளனர்.

இந்நிலையில்,டோக்கியோவில் இன்று நடைபெற்ற பாராலிம்பிக்ஸ்  துடுப்பு படகுப்போட்டி (கேனோ ஸ்பிரிண்ட்) மகளிர் ஒற்றையர் 200 மீ விஎல் 2 ஹீட் 1 பிரிவை இந்திய வீராங்கனை பிராச்சி யாதவ்,1: 11.098 நேரத்துடன் முடித்து 4 வது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அதன்படி,வெள்ளிக்கிழமை காலை 6.20 மணிக்கு அரையிறுதி போட்டியில் பிராச்சி பங்கேற்கவுள்ளார்.இதனால்,இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை பெற்றுத்தர அவர் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும்,பாராலிம்பிக்ஸ் துடுப்பு படகுப்போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனையாக பிராச்சி யாதவ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.