நீட் தேர்வு தற்கொலை:மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி ! 

மேலும் ஒரு மாணவி  செஞ்சி நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் அப்பகுதியில் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். விவசாயக் கூலித் தொழிலாளியான இவரது மகள் பிரதீபா (18). கடந்த 2016-2017-ம் கல்வியாண்டில், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 பயின்று பொதுத்தேர்வில் 1,125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் சேர்ந்து பயில கடந்த ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வை எழுதினார்.

அத்தேர்வில் 159 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தும், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை. எனவே அவர் மீண்டும் நீட் தேர்வெழுத ஓராண்டாக தீவிர முயற்சி எடுத்துப் படித்து வந்தார். அதன்படி இந்தாண்டும் நீட் தேர்வு எழுதினார். அதன் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. அதில் கடந்த ஆண்டை விட மிகக் குறைவாக அதாவது 39 மதிப்பெண் பெற்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி பிரதீபா எலி மருந்து சாப்பிட்டுள்ளார். இதனை தாமதமாக அறிந்த அவரது பெற்றோர், உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள் கிழமை இரவு மாணவி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இறந்த மாணவி பிரதீபாவின் சகோதரர் பொறியியலும், சகோதரி எம்எஸ்சியும் படித்து வருகின்றனர். மாணவி பிரதீபா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மற்றொரு மாணவி தற்கொலை முயற்சி:

செஞ்சி அருகே மேல்சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கீர்த்திகா. இவர் நடந்து முடிந்த ப்ளஸ் டூ தேர்வில் 958 மதிப்பெண் பெற்றார். தொடர்ந்து நீட் தேர்வு எழுதினார். அதில் 44 மதிப்பெண் பெற்றதால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்துள்ளார். உடனடியாக மாணவியின் பெற்றோர் அவரை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். இதுகுறித்து பெரியதச்சூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment