“சொத்து வரி உயர்வுக்கு இதுதான் காரணம்”- அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!

மத்திய அரசின் நிபந்தனை காரணமாகவே வரி உயர்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,சொத்து வரி குறைந்தபட்சம் 25 % முதல் அதிகபட்சம் 150 % வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பல பம்பர் பரிசுகள்:

அந்த வகையில்,தமிழக எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில்,இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது என ட்வீட் செய்திருந்தார்.

கடும் கண்டனம்:

இதனைத் தொடர்ந்து,சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு திமுக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில்:

திமுக சொன்ன விடியல் இதுவா?:

“தமிழகம் முழுவதும் சொத்து வரியை 100% வரை உயர்த்தியிருக்கிற தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதான் நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு தரப்போவதாக சொன்ன விடியலா?,சொத்துவரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

வரி உயர்வுக்கு இதுதான் காரணம்:

இந்நிலையில்,சொத்து வரி உயர்வை மார்ச் 31-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளவில்லை என்றால் மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய சுமார் ரூ.15,000 கோடி நிதியினை வழங்க மாட்டோம் என நிர்பந்தம் கொடுத்ததாக தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்துள்ளார்.

வரி உயர்த்தாவிட்டால் நிதி கிடைக்காது:

குறிப்பாக,வரி உயர்த்தாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி கிடைக்காது என மத்திய அரசு கூறியதாகவும்,எனவே,மத்திய அரசின் நிபந்தனை காரணமாகவே வரி உயர்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,தமிழகத்தில் கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் வரி உயர்த்தப்பட்டுள்ளது.மக்களின் தேவையை பூர்த்தி செய்ய சொத்து வரி உயர்வு அவசியம் எனவும்,ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படாத வகையிலேயே வரி உயர்த்தப்பட்டுள்ளது எனவும் கே.என்.நேரு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.