காவிரி நீர் வழக்கு:முதல் வழக்காக எடுக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!வழக்கை பின்னுக்குத் தள்ளிய உச்ச நீதிமன்றம்!

காவிரி வழக்கு முதல் வழக்காக காலை 10.30க்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது, 33-வது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த வரைவுச் செயல்திட்டத்தை மத்திய நீர்வள அமைச்சகச் செயலாளர் இன்று உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகித் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி வழக்கில் பிப்ரவரி 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் 6 வாரங்களுக்குள் காவிரி தீர்ப்பை செயல்படுத்த உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாத நிலையில் மே மூன்றாம் தேதி மத்திய அரசு சார்பில் மேலும் பத்து நாட்கள் காலக்கெடு கோரப்பட்டது. பிரதமர், அமைச்சர்கள் அனைவரும் கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றதால் வரைவுச் செயல் திட்டத்துக்கு ஒப்புதல் பெற முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மே இறுதிக்குள் தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடும் வறட்சி நிலவுவதால் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என மே எட்டாம் தேதி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்தது. அன்று நடைபெற்ற விசாரணையில் காவிரி தொடர்பான வரைவுச் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், பிரதமரும் அமைச்சர்களும் டெல்லி திரும்பியபின் ஒப்புதல் பெறப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மே 14ஆம் தேதி நீர்வள அமைச்சகச் செயலாளர் நேரில் ஆஜராகி வரைவுச் செயல் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அரசியல் காரணங்களுக்காக வரைவுச் செயல் திட்டம் தாக்கல் செய்வதைத் தள்ளிப்போடுவதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று மத்திய நீர்வள அமைச்சகச் செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வரைவுச் செயல் திட்டத்தைத் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment