சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் ஆவடி ரெயில் நிலையத்துக்கு வந்தது. பயணிகள் ஏறி இறங்கிய பின்னர் அங்கிருந்து ரெயில் புறப்பட்டது.
அப்போது ஓடும் ரெயிலில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அவசரமாக ரெயிலில் ஏற முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கால் தவறி நடைமேடைக்கும், ரெயிலுக்கும் இடையே விழுந்து விட்டார். சிறிது தூரம் வரை அவரை ரெயில் இழுத்துச்சென்றது.
இதை பார்த்து சக பயணிகள் கூச்சலிட்டதால் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். ஆனால் அதற்குள் மூதாட்டி பரிதாபமாக இறந்து விட்டார்.
பலியான மூதாட்டி யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. மூதாட்டியின் உடலை கைப்பற்றி ஆவடி ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்