அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் கடந்த 1 மாதத்திற்கு பின் 32 பைசாக்கள் உயர்வடைந்து ரூ.68.06 ஆக உள்ளது.
வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களால் அமெரிக்க கரன்சிகள் இன்று அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன. இதனால் ரூபாயின் மதிப்பு உயர்வடைந்து உள்ளது.
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 130.41 புள்ளிகள் உயர்வடைந்து 35,417.15 ஆக உள்ளது.
இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 39.45 புள்ளிகள் உயர்வடைந்து 10,749.90 ஆக உள்ளது. எண்ணெய் மற்றும் வாயு, மின்சாரம், சுகாதாரம் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் 0.93 சதவீத உயர்வு காணப்பட்டது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.68.38 ஆக இருந்தது. அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்த நிலையில் உலக அளவில் சந்தையில் பலவீன நிலை ஏற்பட்டது. இதனால் ரூபாய் மதிப்பு சரிவு கண்டது. இந்நிலையில், இன்று ரூபாய் மதிப்பு கடந்த 1 மாதத்தில் இல்லாத வகையில் 32 பைசாக்கள் உயர்வடைந்து உள்ளது.