விரைவில் விசா இன்றி பாகிஸ்தானின் இந்த இடத்திற்கு மட்டும் செல்லலாம்!

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் குருநானக். இவர் சீக்கியர்களின் கடவுளாக கருதப்படுகிறார். இவர் இந்திய எல்லையில் இருந்து சில கிமீ தூரத்தில் இருக்கும் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் எனுமிடத்தில் சுமார் பதினெட்டு ஆண்டுகளாக இருந்ததாக சீக்கியர்களால் நம்பப்படுகிறது. அதனால் ராவி நதிக்கரையில் தர்பார் சாகிப் எனும் பெயரில் அங்கு குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இந்தியாவிலிருந்து சீக்கியர்கள் அதிகம் பேர் சென்று வருவர். அவர்கள் விசா மூலம் மட்டுமே அங்கு சென்று வந்துள்ளனர்.

இதனை தீர்க்கும் வகையில் பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் படி இந்தியாவின் குருதாஸ்பூர் எனும் ஊரிலிருந்து கர்தார்பூர் ஊரை இணைக்கும் இணைப்பு சாலை ஏற்கனவே போடப்பட்டுள்ளது.

மேலும், கர்தார்பூர் செல்லும் இந்திய சீக்கியர்கள் விசா இன்றி செல்வதற்காக அண்மையில் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள அட்டாரியில் நடைபெற்றது. அங்கு பாகிஸ்தானை சேர்ந்த 20 அதிகாரிகளும், இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு பல முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அங்கு வரும் பக்தர்களுக்கு சேவை வரி வசூலிக்க பாகிஸ்தான் அரசு கோரியது. ஆனால், அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துவிட்டது. அடுத்ததாக இந்திய அதிகாரிகள் யாரும் நியமிக்கப்பட கூடாது என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. முதலில் ஒரு நாளைக்கு 5000 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.  பிறகு பக்தர்களின் எண்ணிக்கை கூட்டப்படும். என பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நவம்பர் மாதம் குருநானக்கின் 550-வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் முதல் சீக்கியர்கள்  விசா இன்றி பாகிஸ்தானுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.