அமெரிக்காவிலிருந்து டிக்டாக் தடை.. டிரம்ப் திட்ட வட்டம்.!

கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி லடாக் எல்லையில் இந்திய – சீன ராணுவ வீரர்கள் மத்தியில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. எல்லை தாக்குதலைத் தொடர்ந்து, சீனப் பொருட்களை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என குரல் ஓங்கியது.

இதனால், சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்குத் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. தனிநபர் தகவல்கள் பகிரப்படும் அபாயம் இருப்பதாகக் கூறி டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.

இந்நிலையில், சீனாவிற்கு சொந்தமான வீடியோ பயன்பாடான டிக் டாக்கை அமெரிக்காவிலிருந்து தடைசெய்ய சனிக்கிழமை (அதாவது இன்று ) நிறைவேற்று ஆணையில் கையெழுத்திடுவதாக  அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக என்.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

புளோரிடாவிலிருந்து, வாஷிங்டனுக்கு திரும்பும்  போது  விமானத்தில்  செய்தியாளர்களுடன் டிரம்ப் இந்த கருத்துக்களை தெரிவித்தார். டிக் டாக்கைப் பொருத்தவரை, நாங்கள் அவர்களை அமெரிக்காவிலிருந்து தடைசெய்கிறோம் என்று டிரம்ப் கூறினார், இந்த நடவடிக்கையை  நான் நாளை ஆவணத்தில் கையெழுத்திடுவேன்.

சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான பைட் டான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த பயன்பாட்டை தடைசெய்ய தனக்கு அதிகாரம் இருப்பதாக டிரம்ப் கூறினார். இது நிர்வாக உத்தரவு அல்லது சர்வதேச அவசர பொருளாதார சக்திகள் சட்டத்தின் கீழ் அவர் செய்யக்கூடிய ஒரு நடவடிக்கை எனவும் கூறப்பட்டுள்ளது.

சீன உளவுத் துறையால் டிக் டாக் செயலியில் இருக்கும் தகவல்கள் பயன்படுத்தப்படும் என்று அமெரிக்க அரசு தரப்பினர் கூறியதைத் தொடர்ந்து டிரம்ப், இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. டிக்டாக் உலகின் மிகவும் பிரபலமான செயலிகளில் ஒன்றாகும். இது உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அமெரிக்காவில் 65 மில்லியன் முதல் 80 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் பைட் டான்ஸ் மியூசிகல்.லியை டிக்டாக்கில் இணைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan