டெல்லி தீவிபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி -முதலமைச்சர் அறிவிப்பு

  • டெல்லி அனஜ்மண்டி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.
  • தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

டெல்லி உள்ள அனஜ்மண்டி பகுதியில் சாலையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தூங்கி கொண்டு இருக்கும் போது இன்று அதிகாலை  திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.ஆனால் இந்த  தீ விபத்தில் எதிர்பாராத விதமாக 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு  அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தீவிபத்து நடைபெற்ற இடத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.இதன் பின்னர் அரவிந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் மற்றும்  அரசு செலவில் முழு சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் தீவிபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.