சிக்கலில் சோனியா.,வின் அரசியல் ஆலோசகர்!அமலக்கத்துறை வசம் கிடுக்குப்பிடி

 14 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் கடன் மோசடி தொடர்பான வழக்கில்காங்கிரஸ் பொருளாளர் அகமது படேலிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று  கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோசடி தொடர்பான இவ்வழக்கில், மேலும் சில காங்.,சேர்ந்த மூத்த தலைவர்களும் சிக்க வாய்ப்பு உள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. காங்., கட்சியில் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் ஒருவர் தான் அகமது படேல் (வயது 70).இவர் காங்., கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் ஆக இருந்தவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்சமயம் ராஜ்யசபா எம்.பி.,யாக  பதவி வகித்து வருகிறார். சோனியா, ராகுல் ஆகியோரின் தீவிர விசுவாசி. தேர்தல், சமயங்களில் வேட்பாளர் தேர்வு போன்ற  முக்கிய விஷயங்களில், இவருடைய பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்குமாம்.

இந்நிலையில் காங்.பொருளாரிடம் 14 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் கடன் மோசடி தொடர்பாக அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்திற்குள் சிக்கித் தவிக்கிறார். இதற்கு பின்னணியில் இருப்பது, குஜராத் மாநிலம், வதோதராவை மையமாக கொண்டு செயல்பட்டு வருகின்ற ‘ஸ்டெர்லிங் பயோடெக்’ என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் என்று  கூறப்படுகிறது.

இந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளான நிதின் சந்தேசரா, சேட்டன் சந்தேசரா, தீப்தி சந்தேசரா ஆகியோர்கள் வங்கியில் வாங்கிய சுமார் 14 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் கடனை பெற்றுக் கொண்டு அதை வேறு வழிகளில் தவறாக செலவு செய்ததாக, சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும் தனித் தனியாக வழக்குப் பதிவு செய்தது.

இவ்வழக்கு தொடர்பாக கடந்தாண்டு விசாரணையை துவக்கியது.விசாரனை துவங்கியவுடன்  இந்த மூன்று பேரும், தப்பி ஓடி விட்டனர். தற்போது இவர்கள், ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் தலைமறைவாக இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. அவர்களை நாடு கடத்தி அழைத்து வர, அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.,யும்  முயற்சி எடுத்து வருகின்றன.

ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றிய சுனில் யாதவிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அந்த விசாரணையில் காங்., மூத்த தலைவர் அகமது படேலின் மகன் பைசல், இரவு பார்ட்டியில் பங்கேற்பதற்கான, 10 லட்சம் ரூபாய் செலவை, தான் ஏற்றுக் கொண்டேன் என்று போட்டுடைத்தார்.மேலும்  பைசலின் டிரைவரிடம், 5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் தெரிவித்த அவர், தங்கள் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சேட்டன் சந்தேசரா அறிவுறுத்தலின்படியே  இந்த பணத்தை அவர்களுக்கு கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த, 14 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் மோசடி வழக்கில், அகமது படேலின் குடும்பத்தினருக்கு தொடர்பு  இருப்பதை சந்தேகித்த , அமலாக்கத் துறையினர்  இது தொடர்பாக, அகமது படேலின் மகன் பைசல், மருமகன் இர்பான் சித்திக் ஆகியோரிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு விசாரணை நடத்தினர்.அடுத்த கட்டமாக, அகமது படேலிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டனர். இதற்காக அவருக்கு இரண்டு முறை, சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால் தனக்கு, 70 வயது ஆவதாகவும், விசாரணைக்கு அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வந்தால், கொரோனா பரவும் அபாயம் ஏற்படும் என கூறி, அமலாக்கத்துறை விசாரணைக்கு வர மறுத்து விட்டார். இதன் பின், அகமது படேல் வீட்டுக்கே  நேரடியாக சென்று விசாரணை நடத்த, அதிகாரிகள் திட்ட மிட்டனர். இது தொடர்பாக, அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அவரிடம் வாக்குமூலம் நேற்று காலை, 11:00 மணிக்கு, அமலாக்கத் துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள், டில்லி லுத்யன்ஸ் பகுதியில் உள்ள அகமது படேல் வீட்டுக்கு வந்தனர்.

முக கவசம் அணிந்திருந்த அவர்கள், ஏராளமான ஆவணங்களையும் வைத்திருந்த நிலையில் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்துடன் அகமது படேலுக்கு உள்ள தொடர்பு, அவரது மகன் மற்றும் மருமகனுக்கு உள்ள தொடர்பு குறித்து, அதிகாரிகள் நீண்ட நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதாகவும்,  அவரிடம் பல கேள்விகளை முன்வைத்ததாகவும் படேல் அளித்த வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.

அவர் அளித்த தகவலின் அடிப்படையில், படேல் மீது அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இந்நிலையில் காங்.,கட்சி மேலிட தலைவர்களுக்கு மிக நெருக்கமானவரும், கட்சியின் பொருளாளருமான அகமது படேல், இந்த வழக்கில் சிக்கியுள்ளதால், கட்சியில் உள்ள மற்ற தலைவர்களுக்கும், இந்த வழக்கில் ஏதேனும் தொடர்புள்ளதா? என்பது குறித்த அடுத்தக்கட்ட விசாரணையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.சமீபத்தில் தான், காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத்தின் உறவினர் ரதுல் பூரிக்கு சொந்தமான இடங்களில், சி.பி.ஐ., அதிரடிச் சோதனை நடத்தியது.தற்போது, அகமது படேலிடமும் விசாரணை நடந்து உள்ளது.இந்த சோதனை காங்., கட்சியினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

author avatar
kavitha