“ஈபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் மோடியின் காலடியில் கிடக்கிறார்கள்” – ப.சிதம்பரம் கடும் தாக்கு!!

மோடியின் ஆசியைப் பெற அவரது காலடியில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தவம் கிடக்கிறார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது,அவர் பேசியதாவது.
தமிழகத்தில் பெரும் வலிமையோடு இருந்த நமது காங்கிரஸ் கட்சி, நாட்கள் போக போக காலப்போக்கில் பலம் குறைந்து காணப்படுகிறது. நம்முடடைய பலம், பலவீனம் பற்றி நாம்தான் அறிந்து கொள்ள வேண்டும்.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, 3 அணியாக செயல்படுகிறது. அந்த 3 அணியும், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முண்டியடித்து கொண்டு இருக்கிறது. எந்த அணிக்கும் அறுதி பெரும்பான்மையே கிடையாது.
ஆனால், ஆட்சி மட்டும் அதிமுகவிடம் இருக்கிறது. இன்றும் தொடர்ந்து கொண்டே செல்கிறது. அந்த அணிகளில் உண்மையான பலம் இருந்தால் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவர்கள் கொண்டு வரவேண்டும். அப்படி ஏன் அவர்கள் செய்யவில்லை. பயப்படுகிறார்கள்.
கடந்த 8 மாதங்களாக தமிழகத்தில் மக்களுக்கான எவ்வித நலத்திட்டமும் நடைபெறவில்லை. இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. மக்கள் நம்பிக்கையை பெறவில்லை. எனவே, ஒருநாள் கூட, ஒரு நாழிகை கூட அதிமுக ஆட்சி தொடரக் கூடாது.
நரேந்திர மோடியின் ஆசியை பெற அவரது காலடியில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தவம் கிடக்கிறார்கள். இந்தி ஆதிக்க எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு கொள்கைகளை உடைய தந்தை பெரியார் வழி வந்த திராவிட இயக்கம் பாஜகவின் காலடியில் கிடப்பதை கண்டால், வேதனையாக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

author avatar
Castro Murugan

Leave a Comment