அதிமுக அம்மா அணியில் புதிதாக நிர்வாகிகள் சிலரை நியமித்து, கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
ஆனால், டிடிவி தினகரன் அளித்த மாநில மகளிரணி இணைச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் தெரிவித்து விட்டார்.
இதன் தொடர்ச்சியாக, தனக்கு அளிக்கப்பட்ட அம்மா பேரவை இணை செயலாளர் பதவி வேண்டாம் என ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனியும் தற்போது அறிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி சந்தித்து
பேசினார். பின்னர் பேட்டியளித்த எம்எல்ஏ பழனி, ஜெயலலிதா அளித்த பதவியே தனக்கு போதும் என்றார்.
இதேபோன்று, தினகரன் அளித்த விவசாய அணி இணைச்செயலாளர் பொறுப்பை ஏற்கப் போவதில்லை என்று, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியே முதல்வராக தொடர வேண்டும் என்றும், மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.