ஐசிசி மகளிர் உலகக்கோப்பை டி-20 தொடரின் தொடக்க போட்டியில் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
தென்னாப்பிரிக்காவில் நேற்று ஐசிசி மகளிர் உலகக்கோப்பை டி-20 தொடர் தொடங்கியது. இதில் அறிமுக போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் கேப் டவுனில் மோதின. டாஸ் வென்று தென்னாபிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் அத்தப்பத்து (68 ரன்கள்) மற்றும் விஷ்மி குணரத்னே(35 ரன்கள்) உதவியுடன் 20 ஓவர்களில் அந்த அணி 129/4 ரன்கள் குவித்தது.
பின்னர் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி அடுத்தடுத்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டை இழந்து தடுமாறியது, இருந்தும் அந்த அணி இறுதிவரை போராடியது. முடிவில் தென்னாபிரிக்க அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இலங்கை மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது..
தென்னாபிரிக்க அணியில் அதிகபட்சமாக கேப்டன் சுனே லுஸ் 28 ரன்களும், லாரா வோல்வார்ட் 18 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் இனோகா ரணவீரா 3 விக்கெட்களும், சுகந்திகா குமாரி மற்றும் ஓஷதி ரணசிங்கா தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.