திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு.
அண்ணாமலை பரபரப்பு பேச்சு:
சென்னை அமைந்தகரையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என்றும் தனித்து போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்தாகவும் தகவல் கூறப்படுகிறது. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன்.
பதவியை ராஜினாமா செய்வேன்:
2024 மக்களவையில் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என கூறியதாகவும் கூறப்படுகிறது. சாதாரண தொண்டராக இருந்து பணியாற்றுவேன். தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். பாஜகவை வலுப்படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சி பணியில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கூட்டணி முடிவு:
மேலும், கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை எனவும் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில், கூட்டணி வேண்டாம் என அண்ணாமலை பேசியிருப்பதால் பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
வானதி சீனிவாசன் பதிலடி:
அதிமுக உடனான கூட்டணி தொடர்பாக பாஜகவில் நிலவும் இருவேறு நிலைப்பாடுகளால் தமிழக பாஜகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தேர்தல் தொடர்பான முடிவை பேசும் நேரம் இதுவல்ல, தேசிய தலைமை முடிவு எடுக்கும், பாஜக உயர்மட்ட குழுவில் இருந்து இதுகுறித்து பேச வேண்டும் என எம்எல்ஏ வானதி சீனிவாசன் அண்ணாமலை பேச்சுக்கு பதிலடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.