“முகக்கவசம் அணியுங்கள்” அமெரிக்க மக்களுக்கு அதிபர் பைடன் வேண்டுகோள்!

அமெரிக்கர்கள் அனைவரும் அடுத்த 100 நாட்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் என்று அந்நாட்டின் புதிய அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில்,ஜோ பைடன், அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவியேற்றார். இந்த தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். மேலும், டிரம்பின் அலட்சியத்தால் அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் பரவியுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மக்கள் அனைவரும் அடுத்த 100 நாட்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் என அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மக்கள் அனைவரும் கடந்த மாதம் ஏப்ரல் முதல் முகக்கவசம் அணிந்திருந்தால், 50,000-க்கும் அதிகமான மக்களை காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறியதாக தெரிவித்த அவர், மக்களை முகக்கவசம் அணியுமாறு வேண்டுகோள் விடுத்தார்.