ராஜதந்திர முறையில் இந்தியா -சீனா இடையேயான எல்லை பிரச்சினை தீர்க்க வேண்டும் – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ராஜதந்திர முறையில் இந்தியா -சீனா இடையேயான எல்லை பிரச்சினை தீர்க்க வேண்டும் என்று   மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனா இடையே நீண்ட நாட்களாக லடாக் எல்லையில் பிரச்சனை இருந்து வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே பிரச்சினை ஏற்பட்டது.பல்வேறு கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த சில தினங்களாக அங்கு பதற்றம் இல்லாமல் இருந்து வந்தது.இதனிடையே கடந்த  ஆகஸ்ட் மாத இறுதியில் இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள சூழலை சிதைக்கும் சில காரியங்களில் சீனா ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. தொடர்ந்து இரு தினங்களாக பான்காங் சோ ஏரியின் தெற்குக் கரை பகுதியில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை இந்திய படை விரட்டியடித்தது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் நோவல், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ‌ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள ராஜ்நாத் சிங் இன்று 3 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில் , இந்தியாவின் நிலைப்பாடு லடாக் விவகாரத்தில் மிகவும் தெளிவாக உள்ளது.இந்தியாவிற்கு  சீனாவுடன்  ஒப்பந்தங்களும் புரிந்துணர்வுகளும் உள்ளது.இந்தியா மற்றும் சீனா இருவரும் ஒப்பந்தங்களையும், புரிந்துணர்வுகளையும், கவனமாக கவனிக்க வேண்டும்.தற்போது இருக்கும் சூழ்நிலையில்  எல்லை பிரச்னைக்கு ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் . எல்லையில் ஏற்படும் பிரச்னைகள் இரு நாட்டு உறவுகளையும் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார் .