300கோடி பட்ஜெட்டில் உருவான விக்ரமின் பிரமாண்ட படம் கைவிடப்பட்டதா.?

விக்ரம் நடிக்கும் பிரமாண்ட படமான மகாவீர் கர்ணா படம் கைவிடப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆர் . எஸ். விமல் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் ‘மகாவீர் கர்ணன்’. ‘என்னும் நின்றே மொய்தீன் ‘என்ற மெகா ஹிட் படத்தை இயக்கியவர் தான் ஆர். எஸ். விமல் என்பது குறிப்பிடத்தக்கது. 300கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த பிரமாண்ட படம் மகாபாரதத்திலுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைப்பெற்றதை அடுத்து, விக்ரம் தனது கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். எனவே மகாவீர் கர்ணா கிடப்பில் போடப்பட்டது.

சமீபத்தில் ஆர். எஸ். விமல் தனது அடுத்த படத்தினை குறித்த அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து விக்ரம் படத்தை கைவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பதிலளித்த படக்குழுவினர், படம் கைவிடப்பட்டதாக வெளியான செய்தி வதந்தி என்றும், விக்ரம் கைவசம் வைத்துள்ள படங்களை முடித்த பின்னர் மகாவீர் கர்ணா திரைப்படம் தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.