தனது மூன்று படங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முழு சம்பளத்தையும் வழங்கி உதவிய விஷ்ணு விஷால்..!

தனது மூன்று  திரைப்படத்தில் பணியாற்றும் கிரியேட்டீவ் டீம்ஸ், புரொடக்ஷன் டீம்ஸ் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு முழு சம்பளத்தையும் கொடுத்து உதவிய விஷ்ணு விஷால்.

விஷ்ணு விஷால். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். 2009ல் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தற்போது இவர் பைசல் இப்ராஹிம் ரைஸின் FIR படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் இவர் நடிப்பில் எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகஜலா கில்லாடி படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் தெலுங்கு ஹிட் ஜெர்சியின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் திரைப்படம் மோகன்தாஸ். 

தற்போது ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியது மட்டுமில்லாமல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் திரைப்படதுறை ஊழியர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் பெப்சி தொழிலாளர்களுக்கு தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது விஷ்ணு விஷால் தனது வரவிருக்கும் மூன்று படங்களான FIR, மோகன்தாஸ் மற்றும் பெயரிடப்படாத மற்றொரு திரைப்படத்தில் பணியாற்றும் கிரியேட்டீவ் டீம்ஸ், புரொடக்ஷன் டீம்ஸ் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு முழு சம்பளத்தையும் கொடுத்து உதவியதாக கூறப்படுகிறது. இவரது இந்த செயலுக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.