மோசடி செய்த கணக்காளரை குறித்து பொது அறிவிப்பை வெளியிட்ட விஷாலின் தயாரிப்பு நிறுவனம்.!

விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் பணமோசடி செய்த கணக்காளரான ரம்யா இனி முதல் நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்று பொது அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஷால் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியில் கணக்காளராக பணிபுரிந்து வந்த ரம்யா என்பவர் ரூ. 45 லட்சம் மோசடி செய்ததாக கூறி விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேலாளரான ஹரி, சமீபத்தில் சென்னையில் உள்ள வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதனையடுத்து சென்னை விருகம்பாக்கம் குற்றப்பிரிவு காவல்துறையினர் மோசடி தொடர்புடைய பிரிவின் கீழ் 7.7.2020 அன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதனையடுத்து மோசடி செய்த கணக்காளரான ரம்யா ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தனக்கும் தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், தான் மோசடி செய்ததாக கூறியதை மறுக்கவும் செய்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் இனி ரம்யா என்பவர் தங்களது நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்றும், விஷால் பிலிம் பேக்டரியின் கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் ரம்யாவை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதையும் மீறி அவரிடம் தொடர்பு வைத்து கொள்பவர்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்று தெரிவித்துள்ளனர்.