டிராக்டர் பேரணியில் வன்முறை – தலைமறைவாக இருந்த பஞ்சாப் நடிகர் கைது

விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது நடந்த வன்முறை தொடர்பாக தலைமறைவாக இருந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது.

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பல்வேறு எல்லை பகுதியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே, 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை மேற்கொண்டனர். அப்போது அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பே பேரணி தொடங்கியதால், வன்முறை வெடித்தது. பின்னர் டெல்லி செங்கோட்டையை முற்றிகையிட்டு, கொடி கம்பத்தில் விவசாய கொடியை ஏற்றியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த டிராக்டர் பேரணியில் பஞ்சாப் நடிகரான தீப் சித்து தனது ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டார். இவர்களை விவசாய சங்கத்தினர் சேர்த்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் பேரணியை முன்கூட்டியே தொடக்கிய தீப் சித்து, அனுமதி கொடுத்த வழிகளில் செல்லாமல் காவல் துறையினரின் தடுப்புகளை மீறி செங்கோட்டை வரைச் சென்றார். செங்கோட்டைக்குள் சீக்கிய மதக்கொடியை ஏற்றியது சர்ச்சையான நிலையில், அதனை தன் ஆதரவு விவசாயிகள் தான் ஏற்றியதாக தீப் சித்து ஒப்புக்கொண்டார்.

இதுதொடர்பாக, தீப் சித்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது டெல்லி காவல்துறை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நடிகர் சித்துவும் தலைமறைவானார். பின்னர் தீப் சித்து குறித்து தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது நடந்த வன்முறை தொடர்பாக தலைமறைவாக இருந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்துவை காவல்துறை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்