ஸ்டுடியோ முதலாளிகளே உஷார்…உங்கள் கணினியை ஹேக் செய்ய காத்திருக்கும் ஹாக்கர்கள்..!

திண்டிவனத்தை அடுத்த அய்யன் தோப்பு பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவர் தனது வீட்டிலேயே சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர், வழக்கம்போல் தனது கணினியை ஆன் செய்துவிட்டு பணிகளை தொடங்கினார் அப்பொழுது அவருக்கு ஒரு இ-மெயில் வந்தது அதை பார்த்ததும், அவரின் கணினி தானாக நின்றது. இதனை கண்ட கண்ணன் மிகவும் குழப்பம் அடைந்தார்.

சிறிது நேரம் கழித்து கணினி தானாகவே இயங்க தொடங்கியது. ஒருவழியாக பிரச்சனை முடிந்தது என நினைத்த கண்ணனுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. திருமணம், காதுகுத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் எடுத்த வீடியோக்களும் புகைப்படங்களும் காணாமல் போயினர். அதிர்ச்சி அடைந்த கண்ணனுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி குடுக்கும் வகையில் ஒரு இ-மெயில் வந்தது.

அந்த மின்னஞ்சலை வாசித்ததன் மூலம் தனது கணினியை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது. மேலும் 1120 அமெரிக்க டாலர்கள் ஆன்லைனில் செலுத்தினால் மட்டுமே கண்ணனின் கணினியில் உள்ள அனைத்து பைல்களும் ஒப்படைக்கப்படும். அப்படி பணத்தை கொடுக்காவிட்டால் அனைத்து பைல்களையும் அழித்து விடுவேன் என அந்த ஹேக்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினரிடம் அண்ணன் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சைபர் கிரைம் உதவியுடன் ஹேக்கர் கும்பலில் செயல்படுபவர் யார்? ஏன் ஸ்டுடியோ முதலாளிகளே குறி வைக்கிறார்கள் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மேலும், இதேபோன்ற ஒரு சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரியில் கடந்த 24 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது.