இன்று முதல் தொடங்குகிறது யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகள்..!

இன்று முதல் தொடங்குகிறது யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகள் தொடங்குகிறது. 

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2021-ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நடைபெறுமா என்று தேர்வு எழுதுபவர்கள் மத்தியில் சந்தேகம் நிலவிய நிலையில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், கொரோனா சூழல் குறித்து கவனமாக ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி ஜனவரி 7, 8, 9 மற்றும் 15, 16 தேதிகளில் யுபிஎஸ்சி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மெயின் தேர்வு ஏழாம் தேதி முதல் தொடர்ந்து நடைபெறும்.

கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை மற்றும் ஹால்டிக்கெட்டை பரிசோதித்து அவர்களை அனுமதிக்கலாம் என்றும், தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு சென்று வர வசதியாக தேர்வு தொடங்குவதற்கு முந்தைய நாள் முதல் கடைசி நாள் வரை முடிந்த அளவுக்கு பொது போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யுமாறு மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தேர்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் யுபிஎஸ்சி தேர்வுகள் துவங்க உள்ளன.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.