Madras High Court

விஷச்சாராயத்தில் 29.7% மெத்தனால்.! தமிழக அரசு பரபரப்பு தகவல்.!

By

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் பலர் அருந்திய விஷ சாராயத்தில் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் அளவுக்கு மெத்தனால் இருந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த சம்பவம் குறித்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை இன்று வருகையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் இதுவரை தமிழக அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி தலைமை செயலர் சிவதாஸ் மீனா உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் பல்வேறு முக்கிய தகவல்கள் கூறப்பட்டு இருந்தன.

அதில், சம்பவம் நடந்த உடன் உடனடியாக மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று உடனடி நடவடிக்கையை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்பட்டது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாயையும், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் தொகையும் நிவாரணமாக வழங்கப்பட்டது.

முதலமைச்சரின் உடனடி உத்தரவின் பெயரில் மா.சுப்பிரமணியன், ஏ.வ.வேலு ஆகியோர் கள்ளக்குறிச்சி விரைந்தனர். அடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தமிழக அரசின் உத்தரவின் பெயரில் குற்றவாளிகளை கண்டறியவழக்கானது சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 3 வழக்குகள் பதியப்பட்டன.

கள்ளக்குறிச்சி ஆட்சியர், ஏடிஜிபி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். 9 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக முழுதான அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை சிபிசிஐடி போலீசார் 132 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 6 குழுக்கள் பிரிக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக டிஜிபிக்கள் இந்த வழக்கை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மெத்தனால் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் வரையில் இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்று பல்வேறு முக்கிய தகவல்களை தலைமை செயலர் சிவதாஸ் மீனா அறிக்கையில் குறிப்பிட்டள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து, இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரம் வியாழக்கிழமை (ஜூலை 11) அன்று ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Dinasuvadu Media @2023