இது மாணவர்களை சீரழித்து விடும்! – அன்புமணி ராமதாஸ் ட்வீட்

ஆறாம் வகுப்பு பாட நூலில் ரம்மி ஆட்டம் குறித்து விளக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் ட்வீட்.

இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் ஆறாம் வகுப்பு கணிதப் பாட நூலில் முழுக்கள் என்ற தலைப்பிலான பாடத்திட்டத்தில் சீட்டுக்கட்டுகளைக் கொண்டு ரம்மி ஆட்டத்தை எவ்வாறு விளையாடுவது என்பது குறித்து விளக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மாணவர்களை சீரழித்து விடும்.

முழுக்கள் என்ற பாடத்தின் நோக்கம் எண்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்குவதாக இருக்கலாம். ஆனால், அதற்கு நல்ல உதாரணங்கள் இருக்கும் நிலையில், ரம்மி ஆட்டத்தை எடுத்துக்காட்டாக வைத்திருப்பது தவறு. இது மாணவர்களுக்கு எண்களை கற்றுத்தராது. ரம்மியைத் தான் கற்றுத் தரும்.

ஆன்லைன் ரம்மி ஆட்டம் இளைய சமுதாயத்தை சீரழித்து தற்கொலைக்கும், கொலைகளுக்கும் வழி வகுத்துக் கொண்டிருக்கும் சூழலில், இந்த பாடம் சீரழிவை மேலும் அதிகரிக்கச் செய்யும். மாணவர்களுக்கு நன்மையை போதிக்க வேண்டிய பாடநூல்கள் தீமையை போதிக்கக்கூடாது.

ரம்மியை ஊக்குவிக்கும் முழுக்கள் பாடத்தை மாற்றியமைத்தால் மட்டும் போதாது. சீட்டுக்கட்டுகளுடன் கூடிய அந்த பாடம் மாணவர்களின் கண்களில் படக்கூடாது. அதற்காக இப்போது வரும் கல்வியாண்டுக்கு அந்த பாடம் இல்லாத புதிய பாடநூல்களை அச்சிட்டு வழங்க அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்