இந்து மக்களை ஏய்க்கும் தேர்தல் பிரசார அரசியல் விழா – திருமாவளவன் கண்டனம்.!

ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இதையெடுத்து அயோத்தி நகரமே விழா கோலமாக காட்சி அளிக்கிறது. உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.

கோலாகலமாக நடைபெறவுள்ள இந்த கும்பாபிஷேக விழாவில் அயோத்தி நகரில் பிரபலங்கள், பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 8000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசியல் தலைவர்கள்
சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கலந்துகொள்கிறார்.

இந்த நிலையில், ராமர் கோயில் திறப்பு, ஆன்மிக விழா என்னும் பெயரில் நடைபெறும் அரசியல் விழா நடைபெறுகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், ஐந்து வயது குழந்தை இராமருக்கு அயோத்தியில் மாபெரும் கோவில். நாடெங்கிலும் இராமர் படம் பொறித்த காவிக் கொடிகள் பெருமிதம் குலுங்க பறக்கின்றன. கொண்டாடிக் கூத்தாடும் வெற்றிக் களிப்பில் சங் பரிவார்கள். பாதுகாப்பில்லாத நெருக்கடி நிலையில் இசுலாமியர்கள்.

கர்நாடக மாநிலத்தின் கற்பாறையிலிருந்து எடுக்கப்பட்ட கருப்புக் கல்லில் செதுக்கி வடிக்கப்பெற்ற ஐந்து வயது குழந்தை இராமர் சிலை அக்கோவிலின் கருவறையில் ஏற்கனவே நிறுவப்பட்டு, அதற்கு உயிரூட்டும் நிகழ்வுதான் ஜனவரி 22 அன்று நடைபெறுகிறது. அந்த சடங்குதான் சமற்கிருதத்தில் ‘பிராண பிரதிஷ்டை’ என அழைக்கப்படுகிறது.

ராமர் கோவில் விழா : கலந்து கொள்ளும் தமிழக பிரபலங்கள் யார்?

இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள், தனது கைகளால் தொட்டு பால இராமரின் கற்சிலைக்கு உயிரூட்டப் போகிறார். அதற்கு வட இந்திய சங்கராச்சாரிகளுள் ஒருவர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

அயோத்தியில் நடைபெறுவது கும்பாபிஷேகம் என்னும் குடமுழுக்கு நிகழ்வல்ல. ஏனெனில் இன்னும் கோவிலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. அரைகுறை நிலையில் அவசரம் அவசரமாக இந்த விழா நடத்தப்படுகிறது.

ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி பற்றிய முழு விவரம்..!

இது ஆன்மீக விழா என்னும் பெயரில் நடைபெறும் அரசியல் விழா! இந்துக்களின் நம்பிக்கைக்கான பெருவிழா என்னும் பெயரில் நடத்தப்படும் சங்-பரிவார்களின் மதவெறி கொண்டாட்டத்தின் திருவிழா! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அப்பாவி இந்துக்களின் மத உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கையையும் அரசியல் ஆதாயமாகச் சுரண்டும் சதிவிழா!

இதனை அனைத்துத் தரப்பு இந்துப் பெருங்குடி மக்கள் யாவரும் உணர்ந்து, சங்- பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அணிதிரள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.