மக்களை வாட்டி வதைக்கவே வழி வகுக்கும் – தினகரன்

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது . இதன் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  கொரோனா பாதிப்பால் நொந்து போயிருக்கும் மக்களை மேலும் நோகடிப்பது போல தமிழகத்தில் மதிப்புக்கூட்டு வரியைத்(VAT) திடீரென அதிகப்படுத்தி பெட்ரோல், டீசல் விலையைக் கணிசமாக உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்த போதும் இந்தியாவில் விலை குறைப்பினை மத்திய அரசு செய்யாத நிலையில், அதற்கு நேர்மாறாக இங்குள்ள ஆட்சியாளர்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதைத் துளியும் ஏற்கமுடியாது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்கனவே உயர்ந்திருக்கும் சூழலில்,பழனிசாமி அரசின் இந்நடவடிக்கை ஏழை,எளிய மற்றும் நடுத்தர மக்களை மேலும் வாட்டி வதைக்கவே வழி வகுக்கும். எனவே, பெட்ரோல் – டீசலுக்கான வரியை அதிகப்படுத்தும் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.