விபத்தை ஏற்படுத்திய வாகனம்;தட்டிக் கேட்ட ஸ்விக்கி ஊழியரை தாக்கிய காவலர் கைது!

கோவையின் பீளமேட்டில் உள்ள ஃபன்மால்(FUN MALL) அருகே,ஸ்விகியில் உணவு டெலிவிரி செய்யும் இளைஞர் ஒருவரை போக்குவரத்து காவலர் ஒருவர் தாக்கும் வீடியா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து,இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஸ்விக்கி ஊழியர் மோகனசுந்தரம் என்பவர் கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:”நான் ஒரு பட்டதாரி,எனக்கு பிசினஸ் செய்ய விருப்பம்.எனவே ஸ்விக்கியில் வேலை பார்த்துக் கொண்டே சுய தொழில் செய்து வருகிறேன்.மேலும்,சுய தொழிலால் ஏற்பட்ட கடனை உணவு டெலிவரி வேலை செய்து கொண்டே அடைத்து வருகிறேன்.

இந்த சூழலில்,நேஷனல் மாடல் பள்ளி வாகனம் ஒன்று ஃபன்மால் அருகே ஒரு பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதன்பின்னர்,நான் அந்த வண்டியை நிறுத்த முயன்று நியாயம் கேட்டேன்.ஆனால்,உடனே அங்கிருந்த போக்குவரத்து காவலர் சதீஷ் என்னை அடித்து,அதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம், நீ யார்?,மேலும் அந்த பள்ளி வாகனம் யாருடையது என தெரியுமா? என்று கேட்டு,சம்மந்தப்பட்ட பள்ளி வாகனத்தை அனுப்பி வைத்து விட்டு,என் செல்போன்,ஹெட்போன் உள்ளிட்டவற்றை பிடிங்கி சென்று விட்டார்.எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,உணவு டெலிவரி செய்யும் ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.உணவு டெலிவரி ஊழியர் மோகனசுந்தரம் அளித்த புகாரின் பேரில் காவல்துறை இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும்,மேலும்,காவலர் சதீஸ் கைது செய்யப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கோவை மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Comment