ஒமைக்ரான் பரவல்:இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!

உ.பி:ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் இன்று முதல் (இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை) இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் முன்னதாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இதன்மூலம்,தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.

ஆனால்,தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்த நிலையில்,இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ளனர்.மேலும்,இந்த உருமாற்றம் அடைந்த வைரஸிற்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல்,ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட  நாடுகளிலும் பரவி வருகிறது.அந்த வகையில், இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில்,350 க்கும் மேற்பட்டோர் இதுவரை இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக,ஒமைக்ரான் பரவல் குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் நேற்று முன்தினம் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அப்போது,ஒமைக்ரான் அச்சுறுத்தலால் உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியது.

மேலும்,இரவு நேர ஊரடங்கு,பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க அறிவுறுத்தப்பட்டது.மாநிலங்களில் புதிதாக ஏற்படும் தொற்று,அதன் பரவல் விகிதம் போன்றவற்றை தீவிரமாக கண்காணிக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.மேலும்,18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்யவும்,வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ளும் அறிவுறுத்தப்பட்டது. 

குறிப்பாக,தொற்று உள்ளோரின் மாதிரிகள் உடனடியாக மேல் பகுப்பாய்வுக்காக அனுப்ப வேண்டும்.கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து தொற்று மேலும் பரவாமல் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.அந்த வகையில்,மத்தியப் பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,ஒமைக்ரான் பரவலை தடுக்க தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதித்து உத்தரபிரதேச மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில்,ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.அதன்படி,இன்று இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும்,திருமண விழாவில் 200 பேருக்கு மேல் பங்கேற்க தடை,ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.