பரபரப்பு…உள்ளாட்சி தேர்தல்;வாக்குச்சாவடியில் கத்திக்குத்து…!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் ஊராட்சி வாக்குச்சாவடியில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட தேர்தலானது கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவானது.

இதனையடுத்து,9 மாவட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்றது.

இதற்கிடையில்,வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் ஊராட்சி 8,9 வார்டுகளில் வாக்குப்பதிவின்போது வெங்கடேசன் மற்றும் மகாலிங்கம் என்ற இருவருக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து,மோதல் நீடித்த நிலையில்,மகாலிங்கம் என்பவர் வெங்கடேசன் என்பவரை கத்தியால் குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த வெங்கடேசன் குடல் வெளியே வந்த நிலையில்,அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர்,மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து,எதன்காரணமாக இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது,இருவரும் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்று அணைக்கட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில்,வாக்குச்சாவடியில் சிலர் கள்ள ஓட்டுப் போட முயற்சித்ததாகவும்,இதை தடுப்பதற்காக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,முன் விரோதமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

எனினும்,உண்மையான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும்,வாக்குச்சாவடியில் பலத்த பாதுகாப்பிலும் போலீசார் ஈடுப்பட்டனர்.