கொரோனா தடுப்பூசியால் ஆண், பெண் இருவருக்கும் மலட்டுத்தன்மை ஏற்படாது-மத்திய அரசு..!

கொரோனா தடுப்பூசி போடுவதால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுவதற்கு எந்தவொரு அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக வதந்திகள் பரவுகின்றன. இந்நிலையில் இந்த வதந்திக்கு முடிவுகட்டும் வகையில் மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படாது என்றும் இது பாதுகாப்பானது என்றும் கூறியுள்ளது. கொரோனா தடுப்பூசியை பாலூட்டும் தாய்மார்கள் போட்டுக்கொள்ளலாம் எனவும் அதன்பிறகு குழந்தைக்கு பாலூட்டுவதை நிறுத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் மலட்டுத்தன்மை ஏற்பட்டுள்ளது என்று எவ்வித புகார்களும் அளிக்கப்படவில்லை. மேலும், ஒரு தடுப்பூசி நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னர் மனிதர்களிடம் பல கட்ட பரிசோதனைகள் செய்யப்படும். இதனையடுத்தே மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். இதனடிப்படையில் கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பபு மற்றும் செயல்திறன் குறித்து சோதனை செய்யப்பட்ட பின்னரே அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், சிலர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் மலட்டுதன்மை ஏற்படும் என்று வதந்திகளை பரப்புகின்றனர். இதற்கு எந்தவொரு அறிவியல் பூர்வ சான்றுகளும் கிடையாது. மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்துவது பாதுகாப்பானது மற்றும் செயல்திறன் வாய்ந்தது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.