டுவிட்டர் நிறுவனத்திற்கு மீண்டும் நெருக்கடி..!உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்..!

புதிய டிஜிட்டல் விதிகளை டுவிட்டர் நிறுவனம் பின்பற்றவில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்.

கடந்த மே 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி,50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர் தளங்களைக் கொண்ட அனைத்து குறிப்பிடத்தக்க சமூக ஊடக நிறுவனங்களும் இந்திய பயனர்களின் புகார்களைக் கையாள்வதற்கு ஒரு குறை தீர்க்கும் அதிகாரி, ஒரு முதன்மை இணக்க அதிகாரி மற்றும் ஒரு நோடல் தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும், அத்தகைய அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,இந்திய பயனர்களிடமிருந்து வரும் புகார்களைத் தீர்ப்பதற்கு,இந்தியாவுக்கான டுவிட்டர் நிறுவனத்தின் இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரியாக தர்மேந்திர சாதுர் நியமிக்கப்பட்டார்.ஆனால்,அரசின் விதிப்படி,தர்மேந்திர சாதுர் அவர்களின் பெயர்,முகவரி உள்ளிட்டவை டுவிட்டர் இந்தியா இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில்,டுவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது.இதனையடுத்து,டுவிட்டரின் இந்தியாவுக்கான இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரி தர்மேந்திர சாதுர்  பதவி விலகினார்.

அதன்பின்னர்,புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ்,முகவரி மற்றும் மின்னஞ்சல் ஐடியுடன் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜெர்மி கெசலை இந்தியாவுக்கான குறைதீர்ப்பு அதிகாரியாக நியமித்துள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்து.

இந்நிலையில்,புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் தேவைப்படும் வகையில் குறை தீர்க்கும் அதிகாரிகளை நியமிக்கத் தவறியதால்,புதிய டிஜிட்டல் விதிகளை டுவிட்டர் நிறுவனம் பின்பற்றவில்லை என்று என்று மத்திய அரசு நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மேலும்,டுவிட்டர் நிறுவன வழக்கறிஞரின் மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்த மத்திய அரசு, “டுவிட்டர் மற்றும் பிற சமூக ஊடகங்களுக்கு பிப்ரவரி 25 முதல் வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு போதுமான காலஅவகாசம் வழங்கப்பட்டது.அவை மே 25 முதல் நடைமுறைக்கு வந்தது.

ஆனால்,ஜூலை 1 ஆம் தேதி நிலவரப்படி ஒரு முதன்மை இணக்க அதிகாரி, குறை தீர்க்கும் அதிகாரி மற்றும் ஒரு நோடல் தொடர்பு அதிகாரியை (இடைக்கால அடிப்படையில் கூட) நியமிக்காததால் புதிய ஐடி விதிகளை டுவிட்டர் பின்பற்றத் தவறிவிட்டது.எனவே,தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் பிரிவு 79 (1) இன் கீழ்,சட்ட பாதுகாப்பை டுவிட்டர் நிறுவனம் இழக்க நேரிடும்”,என்று தெரிவித்துள்ளது.