ஸ்பெயின் நிறுவனத்துடன் ரூ.2500 கோடிக்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார். சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹபக் லாய்டு நிறுவனத்துடன் தமிழக அரசு  புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு (Hapag-Lloyd) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் Jesper Kanstrup மற்றும் இயக்குநர் Albert Lorente ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலின் 31.1.2024 அன்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில், 2500 கோடி ரூபாய் முதலீட்டில், தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்நிறுவனம் முன்வந்துள்ளது.

பொதுக்குழு கூட்டம்: மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி? – பாமக இன்று முடிவு…

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சரின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இம்முதலீடு 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸ் நிறுவனத்தின் Laura Berjano, International and Institutional Relations Head, தமிழ்நாடு முதல்வரை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, இந்தியாவிலேயே அதிகமான சாலை அடர்த்தியும், தரமான சாலை கட்டமைப்பும் தமிழ்நாட்டில் உள்ளன என்பதையும், தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த சாலை கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தி, அபர்ட்டிஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் சாலைக் கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாட்டின் மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அபர்ட்டிஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின்போது,தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்  டி.ஆர்.பி. ராஜா, ‘Guidance’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு ஆகியோர் உடனிருந்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan

Leave a Comment