கணவன் மீதுள்ள சந்தேகத்தால், பழிவாங்குவதற்காக வீட்டில் கஞ்சா செடி வைத்த மனைவி!

கணவனின் நடத்தை மீது சந்தேகம் இருந்ததால் வேண்டுமென்றே கணவரை பழிவாங்குவதற்காக வீட்டில் கஞ்சா செடி வைத்து போலீசில் தகவல் தெரிவித்த மனைவி கைது.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கும் நாடு முழுவதிலும் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், ஆங்காங்கு சிலர் தங்களது வீட்டிலேயே கஞ்சா செடிகளை வளர்த்து அடிக்கடி போலீசில் சிக்கிக் கொள்வதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. தங்களது தேவைக்காகவும், பணம் சம்பாதிப்பதற்காகவும் தான் வீட்டில் கஞ்சா செடி வைத்திருப்பவர்களை பார்த்திருப்போம். ஆனால், கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக கஞ்சா செடி வைத்துள்ள பெண் ஒருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டார்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் என்னும் இடத்தில் வசித்து வரக்கூடிய தம்பதிகள் இருவருக்கு இடையே மனகசப்பு இருந்துள்ளது. தனது கணவரின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட பெண் அவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது வீட்டில் கஞ்சா செடி ஒன்றை நட்டுவைத்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் தன் கணவர் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசில் புகாரும் அளித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் நேரில் சென்று விசாரித்த பொழுது அங்கிருந்து 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பெண்மணி தான் வேண்டுமென்றே கஞ்சா செடியை வைத்து கணவரை பழி வாங்கி உள்ளார் என்ற விஷயமும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அப்பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரித்த பொழுது கணவர் அடிக்கடி தாமதமாக வீடு திரும்பியதால் அவர் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை பழி வாங்குவதற்காக  தான் இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal