சூர்யா தவறாகவும் நடக்க மாட்டார், தவறாகவும் பேச மாட்டார் என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று முன் தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிக்கையில்,நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதுல் சொல்வது போல் அவலம் எதுவுமில்லை.
ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழக்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று கூறியிருந்தார்.
இதனிடையே நீதிமன்ற நடவடிக்கையை விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குனர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த பாரதி ராஜா பேசுகையில், சூர்யா தவறாகவும் நடக்க மாட்டார், தவறாகவும் பேச மாட்டார் என்றும் கூறியுள்ளார். மேலும் திரைப்படங்களை திரைக்கு கொண்டு செல்ல என்று நாங்கள் முயற்சிக்கிறோம், படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நாங்கள் ஒரு புதிய தயாரிப்பு சங்கம் தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.