இன்றைய உலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது.! தாய்லாந்தில் RSS தலைவர் பேச்சு.!

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக இந்து காங்கிரஸ் மாநாடு நடைபெறும். 2023ஆம் ஆண்டுக்கான உலக இந்து காங்கிரஸ் மாநாடு தாய்லாந்தில் நடைபெற்றது. இன்று (நவம்பர் 24) தொடங்கிய மாநாடு நாளை மறுநாள் (நவம்பர் 26) முடிவுபெறும்.

தாய்லாந்தில் நடைபெற்ற இந்து காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற இந்து அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் எனும் ஆர்எஸ்எஸ் (RSS) அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இந்து சமயம் பற்றியும் , கலாச்சாரம் பற்றியும், இன்றைய உலகம் என்றும் பல்வேறு கருத்துக்களை கூறினார்.

அவர் கூறுகையில், உலகம் தற்போது தடுமாறி கொண்டிருக்கிறது. கடந்த 2,000 ஆண்டுகளாக பலரும் மகிழ்ச்சி, மற்றும் அமைதியை நிலைநாட்ட பல முயற்சிகளை மேற்கொண்டனர். கம்யூனிசம் மற்றும் முதலாளித்துவம் என பல்வேறு வகைகளில் அதனை தேடினர். பல்வேறு மதங்கள் மூலமும் அன்பையும், அமைதியையும் பெற முயற்சித்தார்கள்.  அதிக பொருட்செல்வம் வேண்டும் என கருதினர். ஆனால் எதுவும் திருப்தி அளிக்கவில்லை. இப்போது குறிப்பாக கொரானா காலத்திற்கு பிறகு, மக்கள் தங்கள் முயற்சிகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளனர். தற்போது அவர்கள் நமது பாரதம் அதற்கான வழி கொடுக்கும் என ஒருமனதாக எண்ணுகிறார்கள்.

நமது இந்து மரபுகள் அனைத்தும் ‘தர்மத்தின்’ வழிகாட்டுதல்கள் ஆகும். ஒழுக்கத்தை பின்பற்றுவதற்கு நமது பாரதத்தில் உள்ள அனைத்து சம்பிரதாயங்களும் உதவும்.  இந்த உலகம் ஒரே குடும்பம். எல்லோரையும் ஒரே கலாச்சாரம் ஆக்குவோம்.

சத்தியமும் அகிம்சையும் நமது பாரதத்தின் அடிப்படை கொள்கைகள். நாங்கள் எல்லா இடங்களுக்கும் செல்கிறோம். அனைவரின் இதயத்தையும் தொடுகிறோம். அவர்கள் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் நாங்கள் அனைவரையும் இணைக்க வேண்டும் என்றே நினைக்கிறோம்.

பொருளாதார தேவைகளுக்காக , அதனை அடைய மக்கள் அனைத்து வழிகளையும் பயன்படுத்தி மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த எண்ணங்கள் நல்லதல்ல. அதன் நோக்கம் சுயநலம் மட்டுமே. அப்படிபட்டவர்கள் மற்ற சமூகங்களின் மீது ஆக்கிரமிப்புகளைச் செய்தார்கள். 250 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா ஆங்கிலேயர்களால் பொருட்செல்வத்திற்காக கொள்ளையடிக்கப்பட்டது என்றும் தனது உரையில் RSS தலைவர் மோகன் பகவத் தாய்லாந்தில் நடைபெற்ற உலக  இந்து காங்கிரஸ் 2023 மாநாட்டில் குறிப்பிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.