அதிர்ச்சி…பெட்ரோல்,டீசல் விலை 7 வது நாளாக உயர்வு – கவலையில் வாகன ஓட்டிகள்..!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏழாவது நாளாக  உயர்ந்தது வாகன ஓட்டிகளை கவலையடைய செய்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.அந்த வகையில்,தமிழகத்தில் இந்த வருட தொடக்கத்திலிருந்து பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வந்தது.தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டது.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.106.35-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.102.59-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,இன்று  ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.106.66 மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை மாற்றமின்றி ரூ.102.59-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல,தலைநகர் டெல்லியில் நேற்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.109.69-க்கும்,ஒரு லிட்டர் டீசல்  விலை ரூ.98.42-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,இன்று டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 காசுகள் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு ரூ.110.04 ஆக அதிகரித்துள்ளது, டீசல் விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.98.42 ஆகவும் உள்ளது.

மேலும்,மும்பையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டருக்கு ரூ.115.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.106.62 ஆகவும் உள்ளது.

பெட்ரோல் விலை தொடர்ந்து ஏழாவது நாளாக லிட்டருக்கு 35 காசுகள் அதிகரித்துள்ளது.பெட்ரோல், டீசலின் விலையேற்றத்தால்,வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக,சரக்கு வாகனங்களின் வாடகை அதிகரித்து அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது.