தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் இன்று பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டு பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், இன்று முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களை வகுப்புக்கு  அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதுபோன்று தமிழகத்தில் முதலாம் ஆண்டை தவிர மற்ற கல்லுாரி மாணவர்கள் கல்லுாரியில் நேரடி வகுப்புகளில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவு எடுத்து, இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை அரைநாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும். 9 மற்றும் 11-ம் வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 10, 12-ம் வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. கொரோனா அறிகுறிகள் இருந்தால் வகுப்பறைக்குள் ஆசிரியர்கள், மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டியது கட்டாயம் என்றும்  தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் புதுச்சேரியில் கலை அறிவியல் கல்லூரிகளும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று முதல் திறக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்