சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு -சிபிஐ பதில் அவகாசம்

சிபிஐ பதிலளிக்க அவகாசம் அளித்து ஜாமீன் மனுவை 17-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.விசாரணைக்கு பின்னர் காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் மேலும் காவலர்கள் வெயிலுமுத்து , சாமதுரை, செல்லதுரை ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டது.பின்னர் விசாரணைக்கு பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதனிடையே மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் காவலர் முருகன் என்பவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக சிபிஐ தரப்பு தெரிவித்தது.இதனையடுத்து சிபிஐ வாதத்தை ஏற்று ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.

இதனால் காவலர் முருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.அவரது மனுவில்,மேலதிகாரிகளின் கட்டளைக்கு பணிந்து அந்த புகாரில் கையொப்பமிட்டதை தவிர, எந்த விதத்திலும் இந்த வழக்கில் நான் சம்பந்தப்படவில்லை.இதன் விளைவாக எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.அப்பொழுது ஜாமீன் வழங்க எதிர்ப்பு  தெரிவித்து ஜெயராஜ் மனைவி செல்வராணி   மனு தாக்கல் செய்தார்.சிபிஐ தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய சிபிஐ-க்கு அவகாசம் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை ஆகஸ்ட் 17-க்கு ஒத்திவைத்து அன்று பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.