சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு – பால்துரை ஜாமீன் மனு இன்று விசாரணை !

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கில்  சிறப்பு காவல் உதவியாளர் பால்துரை ஜாமீன் மனு இன்று  விசாரணைக்கு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. விசாரணையில் சிபிஐ விசாரணை நடத்தும் வரை இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.அதன்படி முதலில்  காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.இதனிடையே  சிறப்பு காவல் உதவியாளர் பால்துரை தூத்துக்குடி மாவட்ட முதன்மை  நீதிமன்றத்தை ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார்.இவரின் வழக்கு விசாரணை நேற்று முன்தினம்  நடைபெற்ற நிலையில் அன்று  சிபிஐ ஆஜராகாத நிலையில் வழக்கின் விசாரணை நேற்று  ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் நேற்றும்  சிபிஐ ஆஜராகாத நிலையில் வழக்கின் விசாரணை மீண்டும் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.