சாத்தான் குளம் தந்தை-மகன் விவகாரம்! நவம்பர் 11-ஆம் தேதி விசாரணைதொடக்கம் ! சிபிஐ தகவல்!

சாத்தான் குளம் தந்தை-மகன் விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நவம்பர் 11-ஆம் தேதி விசாரணை  தொடங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் கொலை வழக்கில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 காவலர்கள்  கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கில் நவம்பர் 11-ஆம் தேதி முதல் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கவுள்ளதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சிபிஐ தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் உதவி காவல் ஆய்வாளர் ராகு கணேஷ் மற்றும் தலைமை காவல் ஆய்வாளர் முருகன் ஆகியோர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பதாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், நீதிபதிகள் விதிக்கும் அனைத்து நிபந்தனைக்கும் கட்டுப்படுவோம். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு 130 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதனை தொடர்ந்து, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக உதவி காவல் ஆய்வாளர் ராகு கணேஷ் மற்றும் தலைமை காவல் ஆய்வாளர் முருகன் ஆகியோர் பார்க்கப்படுகிறார்கள். தந்தை, மகன் இருவரையும் மிருகத்தனமாக தாக்கியதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். காவலர் ரேவதி கொடுத்த வாக்குமூலத்திலும், இருவரும் கொலை செய்யப்பட்டு தாக்கப்பட்டதில் இருவரின் பங்கு முக்கியமானதாக கூறப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணையின் அடிப்படையிலும், ஆவணங்களின் அடிப்படையிலும் இருவரும் முக்கிய குற்றவாளிகளாகவே பார்க்கப்படுகின்றனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில், நவம்பர் 11-ஆம் தேதி தேதி விசாரணை நடைபெறவுள்ளது. ஆகவே, குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க கூடாது என தெரிவித்தனர்.

இதற்கு மனுதாரர் தரப்பில், புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே தந்தை – மகன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது என தெரிவித்தனர். இதற்கு சிபிஐ தரப்பில் வாதிட்ட நீதிபதிகள், காவல்நிலையத்தில் அளிக்கப்படும் அனைத்து  புகார்களுக்கும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறதா? அப்படி இருந்தால் எப்.ஐ.ஆர் பதிவு செய்யக்கோரி பல மனுக்கள் ஏன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது? என்றும் கேள்வி எழுப்பிய நிலையில், தொடர்ந்து இருவரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.