இயற்கை, புறம்போக்கு கண்ணீரை வரவழைத்தன.! எனது சாபமும், வரமும் அதுதான்.! எஸ்.பி.ஜனநாதனின் சிலை திறப்பு விழா.!

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் சிலை திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.

இயற்கை, பேராண்மை, புறம்போக்கு, லாபம் என கம்யூனிச சித்தாந்தத்தை தனது திரைப்படைப்புகள் மூலம் அழுத்தமாக பதிவிட்டவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். கடந்த மார்ச் மாதம் இவர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் நினைவாக திருவாவடுதுறை ராஜரத்தினம் அரங்கில் அவருக்கு முழு உருவ சிலை நிறுவும் விழா நேற்று நடைபெற்றது. இதில், மூத்த அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் சிலையை திறந்துவைத்தார். உடன் நடிகர் விஜய் சேதுபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுகவை சேர்ந்த மல்லை சத்யா, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டு இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

விஜய் சேதுபதி பேசுகையில், ‘ என் வாழ்வில் எனக்கு கிடைத்த வரம் அவரது படத்தை நான் தயாரித்தது. எனக்கு கிடைத்த சாபம் அது அவரின் கடைசி படமாக அமைந்தது தான். கம்யூனிசத்தை செயல்களில் மூலமும் வாழ்க்கை முறையிலும் வாழ்ந்து காட்டியவர் எஸ்.பி.ஜனநாதன். அவரது சிலையை பொதுவெளியில் வைக்க கையெழுத்து இயக்கம் நடத்தவேண்டும்.’ என பேசியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் குறித்து பேசுகையில், ‘ இயற்கை, புறம்போக்கு திரைப்படங்களை பார்க்கும் போது எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. புறம்போக்கு படம் பற்றி பேசும்போது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் , விஜய் சேதுபதி இவ்வளவு சாதாரமாக இருக்கிறார்களே என நினைத்து ஆச்சர்யப்பட்டேன். கம்யூனிச கருத்துக்களை தனது படங்கள் மூலம் பேசியவர். ‘ என பேசியிருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், ‘திரைத்துறை போன்ற கடினமான இடத்திலும் வெற்றிகரமாக தனது தத்துவங்களை பேசியவர் ஜனநாதன். இன்னும் 10 ஆண்டுகள் மட்டும் வாழ்ந்திருந்தால் இந்திய அளவில் கம்யூனிஸம் குறித்த கருத்துகளை தனது திரைப்படங்கள் மூலம் கொண்டு சென்றிருப்பார்.’ என பேசி முடித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.