இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிக்க பக்கத்து வீட்டில் கைவரிசை.! சிசிடிவியால் சிக்கிய 19 வயது திருடன்.!

வேலூரில் இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிக்க 11 சவரன் நகை திருடிய நபர் கைது. 

கோவையைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிப்பதற்காக வேலூரைச் சேர்ந்த 19 வயது இளைஞர், 11 சவரன் தங்க நகைகளை திருடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் சித்தேரியைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் என்ற நபர். திருமணங்களுக்கு தாம்பூலப்பை தயாரிக்கும் நரேஷ்குமார் மகாசிவராத்திரியை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு சென்றுள்ளார்.

கோவிலில் இருந்து வீடு திரும்பிய நரேஷ்குமார், அவரது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கவனித்தார். அதிர்ச்சியடைந்த அவர் வெற்றிக்கு உள்ளே சென்று பார்த்தபோது பூட்டி வைக்கப்பட்டிருந்த பீரோ திறந்து இருப்பதை பார்த்தார். சில நிமிட சோதனையில் பீரோவில் வைத்திருந்த 11 சவரன் தங்க நகைகள் மற்றும் 250 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அரியூர் காவல்நிலைய போலீசார் நரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காவல் ஆய்வாளர்கள் விசாரணையின் முதற்கட்டமாக சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். கேமராவில் உள்ள வீடியோ காட்சிகளை பார்த்ததில் சம்பவ பகுதியில் சந்தேகப்படும் விதமாக சென்ற இளைஞரை விசாரணை செய்தனர். விசாரணையில் சந்தேகத்திற்குரிய இளைஞர் நரேஷ்குமாரின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 19 வயதான அர்ஜூன் ராஜ்குமார் என்று அடையாளம் காணப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுன், நரேஷ்குமாரின் வீட்டில் திருடியது தெரிந்தது.

இதையடுத்து திருடப்பட்ட 11 சவரன் தங்க நகைகள் 250 கிராம் வெள்ளி பொருட்கள் அர்ஜூன் ராஜ்குமாரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதோடு அவரை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுன் என்பவர் முன்னதாகவே பல திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார் என்று கூறினர். இதையடுத்து கோவையைச் சேர்ந்த அவரது இன்ஸ்டாகிராம் தோழியை சந்திக்க செல்லும்போது  பரிசளிப்பதற்காக நரேஷ்குமார் வீட்டில் திருடியுள்ளார் என்று மேலும் கூறினர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment