- பருவமழை தீவிரமடைந்து வருவதால் மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய மாவட்டங்களில் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 9 ஆம் தேதியன்று மும்பையில் பருவமழை தொடங்கியது. முதல் நாள் பெய்த கனமழை காரணமாக மும்பை நகரம் முழுவதும் வெள்ளம் போல் காட்சியளித்தது. சாலைகளிலும், தண்டவாளங்களிலும் மழைநீர் சூழ்ந்ததால் வாகன போக்குவரத்து ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. அதன்பின்னர், மும்பை நகரில் நேற்று காலை மிதமான மழையே பெய்துள்ளது.
இதன் காரணத்தால் மக்கள் அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனால், மதியத்திற்கு மேல் மழை வெளுத்து வாங்க ஆரம்பித்தது. மும்பை, தானே, நவிமும்பை, பால்கர் பகுதிகள் மீண்டும் கனமழையால் பாதிக்கப்பட்டது. இதனால் அதிகபட்சமாக தசிகர் பகுதியில் 11.1 செ.மீ. மழையும், போரிவிலி, காந்தவிலி, பாந்த்ரா, மலாடு, கோரேகாவ், மகாலட்சுமி, சாந்தாகுருஸ், ஜுகு ஆகிய இடங்களிலும் அதிக மழை பெய்துள்ளது.
இதனை அடுத்து வானிலை ஆய்வு மையம் நாளை மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மும்பையில் நாளை மிக மிக அதிகமான கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பை மற்றும் கொங்கன் மண்டல பகுதிகளில் தொடர்ந்து 4 நாட்கள் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் காரணத்தால் தற்போது மும்பை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தாழ்வான மற்றும் ஆபத்து பகுதியில் தங்குபவர்களை பாதுகாப்பாக மாநகராட்சி பள்ளிகளில் தங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.