ரகு கணேஷ் கைது வரவேற்கிறேன்.! ஸ்ரீதரை கைது செய்யாமல் விட்டது ஏன்? – கனிமொழி

சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளத. இந்த வழக்கு தொடர்பான  விசாரணையை சிபிஐ தொடங்கும் வரை இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து, ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் நேற்று தொடங்கியது. நேற்று காலை முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து சிபிசிஐடி  தீவிர விசாரணை நடத்தியது.

நேற்று இரவு தந்தை, மகன் இறந்த வழக்கை 302 (கொலை) பிரிவு உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு செய்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக, எஸ்.ஐ. ரகு கணேஸை சி.பி.சி.ஐ.டி கைது செய்தனர்.

இந்நிலையில், எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பலர் வரவேற்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி எம்.பி  கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்திருப்பதும்,எஸ்.ஐ.ரகு கணேஷ் கைது செய்யப்பட்டிருப்பதும் காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் வரவேற்கிறேன்.

ஆனால், சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை கைது செய்யாமல் விட்டது ஏன்? இதோடு நின்றுவிடாமல், இருவரது கொலைக்கும் உடந்தையாக இருந்த காவல் துறையினர், மருத்துவர், மாஜிஸ்திரேட் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீதி கிடைக்கும் வரை நம் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan