“உடலில் களிமண் பூசி, சங்கு ஊதினால் கொரோனா தொற்றுக்கான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்”- பாஜக எம்.பி.!

உடல் முழுவதும் களிமண் பூசி, சங்கு ஊதினால் கொரோனா தொற்றுக்கான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என பாஜக எம்.பி. சுக்பீர் சிங் கூறினார்.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்த வைரஸ் பரவலை தடுக்க, பல நாடுகள் தடுப்பு மருந்துகளை தயாரித்து, சோதனை செய்யும் முயற்சியில் தீவிரமடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் பலரும் கொரோனா நோய் தொற்றுக்கு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம்பால் மேக்வால், கடந்த சில தினங்களுக்கு முன், அப்பளம் சாப்பிட்டால் கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என கூறினார்.

அவரைத்தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலம், டோங்க் எனும் பகுதியில் உள்ள சவாய் மாதோபூரை சேர்ந்த பாஜக எம்.பி. சுக்பீர் சிங், உடல் முழுவதும் களிமண் பூசி, சங்கு ஊதினால் கொரோனா தொற்றுக்கான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என கூறினார். இதற்கு முன், சர்வதேச யோகா தினத்தன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், களிமண்ணில் அமர்ந்து யோகாசனம் செய்தால் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என கூறியது குறிப்பிடத்தக்கது.