குஜராத்தில் ‘டவ்-தே’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு..!

குஜராத்தில் ‘டவ்-தே’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.

அரபிக் கடலில் கடந்த வாரத்தில் உருவான ‘டவ்-தே’ புயலால் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா, கோவா, டையூ,டாமன் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வந்தது.இந்நிலையில் இந்த புயல் நேற்று முன்தினம் இரவு, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது.

அவ்வாறு,புயல் கரையைக் கடந்தபோது மும்பை மற்றும் குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் 175 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதனையடுத்து,குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் ‘டவ்-தே’புயலால் நிலச்சரிவு ஏற்பட்டது.மேலும்,பலத்த காற்று வீசியதால் 16,500 வீடுகள் சேதமடைந்தன.மேலும், 40,000 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.இதனைத் தொடர்ந்து,குஜராத்தில் 5,951 கிராமங்களில் இருந்து மின் தடை ஏற்பட்டது.

மேலும்,’டவ்-தே’ புயலால் இதுவரை மகாராஷ்டிராவில் 12 பேர்,தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் 5 பேர் என இதுவரை மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,28 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், மேலும், கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,’டவ்-தே’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து வான்வழி ஆய்வு நடத்த பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்திற்கு புறப்பட்டுள்ளார்.

அதன்படி,பிரதமர் மோடி இன்று காலை 9:30 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்டு பாவ்நகரில் தரையிறங்கவுள்ளார்.அங்கிருந்து உனா,டியு, ஜஃபராபாத் மற்றும் மஹுவா ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் வான்வழி ஆய்வு செய்யவுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ஆய்வு மேற்கொண்ட பிறகு,பிரதமர் மோடி அகமதாபாத்தில் மாநில அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தையும் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.