“நமோ பாரத்”.. அதிவேக ட்ரான்சிட் ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக ட்ரான்சிட் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடியால் இன்று துவங்கப்படும் பிராந்திய விரைவு போக்குவரத்து சேவையான, அதிவேக மெட்ரோ ரயில்களுக்கு, ‘நமோ பாரத்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறையில் சமீப காலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

புதிது புதிதாக ரயில்வே துறையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அப்படி அறிமுகப்படுத்தியது தான் வந்தே பாரத் ரயில் சேவையாகும். வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்போது அவர்கள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களையும் அறிமுகப்படுத்த உள்ளனர். இது தவிர ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய ரயில்வே துறை எடுத்து வருகிறது.

அதன்படி, நாடு முழுவதும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடக, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்கள் மூலம் நேரம் சேமிக்கப்படுவதோடு சொகுசான பயணமும் கிடைப்பதால் இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிவேக ரயிலாக, ‘வந்தே பாரத்’ ரயில் மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகிறது.

இருப்பினும் பல்வேறு விமர்சனங்களும் இந்த சேவை மீது உள்ளது. கட்டணம் சற்று கூடுதலாக இருப்பதாக கூறி வரும் மக்கள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக ட்ரான்சிட் ‘நமோ பாரத்’ ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுடெல்லியில் தொடங்கி வைக்கிறார். மணிக்கு 180 கி.மீ., வேகம் செல்லும் அதிவேக மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படுகிறது.

இந்திய ரயில்வே முன்னெடுத்துள்ள ஒரு முக்கியமான திட்டம் RRTS – Regional Rapid Transit System.  குறுகிய தொலைவு கொண்ட இரு நகரங்களை இணைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் முதல் ரயில் இன்று சாஹிபாபாத் மற்றும் துஹாய் டிப்போ இடையே இயக்கப்பட உள்ளது. மேலும், நாட்டின் முதல் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் ரயில் சேவை, என்.சி.ஆர்., எனப்படும் தேசிய தலைநகர் பகுதிகள் முழுதும் உள்ளடக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்