30 பிபிஇ கையுறைகளை சாப்பிட்ட வளர்ப்பு நாய்க்கு 3 மணி நேர அறுவை சிகிச்சை !

காரில் வேலைக்காக வைத்திருந்த கையுறை பெட்டியிலிருந்து சாப்பிட்டிருக்க வேண்டும் – நாய் உரிமையாளர் விளக்கம்!

லண்டனில் டாரென் கொய்ன் என்பவர் ராம்போ என்ற ரோட்வெய்லர் நாய்யை வளர்த்து வந்துள்ளார். ராம்போவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளது. இதை அறிந்த நாய் உரிமையாளர் ராம்போவை உடனே கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு கெய்த் லியோனார்ட் என்ற மருத்துவர் என்டோஸ்கோபி மூலம் நாயின் வயிற்றை பரிசோதித்து பார்த்துள்ளார்.

அதில் வளர்ப்பு நாயானது அதிக கையுறைகளை சாப்பிட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் நாயின் உரிமையாளரிடம் இதை பற்றி விசாரிக்கையில் தாம் தனது காரில் வேலைக்காக கையுறை பெட்டியை வைத்திருந்ததாகவும், நடைபயிற்சி செய்ய காரில் நாயுடன் சென்ற போது அதை ராம்போ சாப்பிட்டிருக்க கூடும் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் ராம்போ வயிற்றிலிருந்து 29 கையுறைகளை அகற்றியுள்ளார். மேலும் 12 மணி நேர மருத்துவ சிகிச்சைக்கு பின் வளர்ப்பு நாயை அதன் உரிமையாளர் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.