தமிழ்நாடு முழுவதும் நாளை மக்கள் குறைதீர் நாள் கூட்டம்!

தமிழ்நாடு முழுவதும் நாளை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்களில் நாளை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெரும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொழிற்சாலைகளுக்கு இசைவாணை வழங்குதல் மற்றும் அவற்றை கண்காணித்தல் மற்றும் மாசு தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்தல் ஆகியவை வாரியத்தின் சில முக்கியமான செயல்பாடுகளாகும்.

இந்த செயல்பாடுகளில் பெரும்பாலானவை கடந்த சில ஆண்டுகளில் இணையவழி மூலமாக செயல்படுத்தப்படுவதால் பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோருடன் நேரடி கலந்துரையாடல் மிகவும் குறைந்துள்ளது. வாரியத்தின் அதிநவீன இணையவழி வசதிகள் விண்ணப்பம்/மனுவின் நிலையை அவ்வப்போது தெரிவித்தாலும், நேரடி கலந்துரையாடல் மூலம் மட்டுமே பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோருடன் புரிதல் மற்றும் அதிக நம்பிக்கையை உருவாக்க முடியும்.

எனவே, தொழிற்சாலைகள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றுடன் நேரடி கலந்துரையாடல்களை எளிதாக்குவதற்கும், வாரியத்தின் செயல்பாடுகளை மிகவும் வெளிப்படையான மற்றும் நம்பகமான முறையில் செயல்படுத்துவதற்கும் வாரியம் ‘நேரடி கலந்தாய்வு அமர்வு” (OPEN HOUSE SESSION) நடத்த முன்வந்துள்ளது. தனிநபர், தொழிற்சாலைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது நலச் சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள, மாசு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இசைவாணைகள் குறித்து புகார் செய்ய மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகள், கருத்துகளை தெரிவிக்க இந்த அமர்வில் பங்கேற்று சம்பந்தப்பட்ட வாரிய அதிகாரிகளை சந்திக்கலாம்.

நேரடி கலந்தாய்வு அமர்வு ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதி காலை 11 மணியளவில் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும், அனைத்து மண்டல அலுவலகங்களிலும் மற்றும் வாரியத்தின் தலைமை அலுவலகத்திலும் நடைபெறும். இந்த நிலையில், 5-ஆம் தேதி விடுமுறையாக இருப்பின், அடுத்த வேலை நாளில் அதாவது நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு நபரும் முன் தகவல் / அனுமதியும் இல்லாமல் நேரடி கலந்தாய்வு அமர்வில் பங்கேற்கலாம். இருப்பினும், நேரடி கலந்துரையாடலில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் வருகைக்கு முன்னதாகவே இதற்காக வாரியத்தால் உருவாக்கப்பட்டுள்ள இணையவழி செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

இதன் மூலம் வாரிய அதிகாரிகள் பங்கேற்பாளர்களுக்கு நேரடி கலந்துரையாடல் நாளில் அல்லது முடிந்தால் அதற்கு முன்னதாகவும் பதிலளிக்க இயலும். இதற்காக வாரிய இணையதளமான www.tnpcb.gov.in இல் ‘OPEN HOUSEல் என்ற இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் தங்கள் வருகையின் போது “ஆதார் அட்டையை” தவறாமல் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளை சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு தவற விட்டு விடாதீர்கள்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment