பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
நாளை பொருளாதார ஆய்வறிக்கை:
நாளை தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த அறிக்கை 2022-23 முழு நிதி ஆண்டுக்கான இந்திய பொருளாதாரத்தின் நிலையையும், நிதி வளர்ச்சி, பண மேலாண்மை மற்றும் வெளித்துறைகள் உள்ளிட்ட எதிர்கால நோக்கத்தை கொண்டு மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.
நாளை மறுதினம் பட்ஜெட் தாக்கல்:
நாளை மறுநாள் காலை 11 மணிக்கு மக்களவையில் 2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் தொடர்ந்து தாக்கல் செய்கிற 5-வது பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட் உரை நேரடியாக மக்களவை டி.வி.யில் ஒளிபரப்பாகிறது. பின்னர் மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் வைக்கப்படுகிறது.
காகிதமில்லா பட்ஜெட்:
அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிற கடைசி முழுமையான பட்ஜெட்டாக இது அமைகிறது. மேலும், இந்த 2023-24-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாகவே அமைய உள்ளது.
அனைத்துக்கட்சி கூட்டம் மற்றும் மத்திய அமைச்சரவை கூட்டம்:
இதனிடையே, நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதை அடுத்து இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது மத்திய அரசு. மேலும், இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் கூடவுள்ளதை அடுத்து அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார். ஜி-20 மாநாடு உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.